முன் குறிப்பு: வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள் எவர் மீதும் இரண்டு காரணங்களுக்காக கண் மண் தெரியாமல் கோபம் கொள்ளலாம்.
1.வரலாற்றைத் திரித்தல். (பொய்களை பிரச்சாரப்படுத்துதல்)
2.புனித பிம்பப்படுத்துதல். (சில உண்மைகளை மட்டும் சொல்லாதிருத்தல் அல்லது தவறுகளை மறைத்தல்)
*********************************************************************************************************
விநாயக் தாமோதர் சாவர்க்கர். தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டவர். பின்னாளைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.
ஒரு பக்கச் சரித்திரம் இவரை தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர்,தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்டவர் என்றும் பல்வேறு விதமாய் இவர் புகழைத் தொடர்ந்துப் பாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் இவர் குறித்து தீவிர விமர்சனங்களும், குற்ற்ச்சாட்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. காந்தியடிகளின் கொலையில் மிகப்பெரும் பங்கு வகித்தவர், பிரிட்டிஷாரிடம் தொடர்ச்சியாய் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி மன்றாடியவர், இந்து மகாசபையைத் தோற்றுவித்து முஸ்லீம்களின் மீதான துவேஷத்திற்கு தொடர்ந்து பங்காற்றியவர், பல இளைஞர்களை தவறான பாதைக்கு வழிக்காட்டியவர் என்று இவர்மீதான மாற்று வரலாற்றுப் பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
இந்த சூழலில் கிழக்கு பதிப்பகம் மூலம் இலந்தை.சு.ராமசாமி அவர்களால் எழுதப்பட்ட வீர் சாவர்க்கர் புத்தகத்தை நான் படிக்கத் தொடங்கும் முன்பு என்னுள் பல்வேறு எதிர்பார்ப்புகள், கேள்விகள் இருந்தன. குறிப்பாய் வீர் சாவர்க்கரைப் பற்றி பல்வேறு தமிழ் மக்களால் விரும்பி படிக்கப்படும் கிழக்கு பதிப்பகம் எப்படிப்பட்ட வரலாற்றை முன்வைக்கப் போகின்றது என்ற பெரிய கேள்வி என் முன்னால் இருந்தது.
எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறேன். புத்தகத்தை படித்து முடித்ததும் நான் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. சமீப காலங்களில் என்னை இந்தளவிற்கு கோபப்படுத்திய புத்தகம் வேறெதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு போட்டிருக்கிறது. “தேசபக்தர். இந்து தீவிரவாதி. இஸ்லாமியர்களின் விரோதி. தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவர். நிஜத்தில் யார் இந்த சாவர்க்கர்? அழுத்தம் திருத்தமாக பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.” உண்மைதான் மிக அழுத்தமாய் இதைப் படிப்பவர்கள் மனதில் வீர் சாவர்க்கர் மீது ஒரு ஹீரோ வொர்ஷிப்பை ஏற்றி வைக்க அரும்பாடு பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.
“படைப்பு உருவான பின்பு படைப்பாளி இறந்து விடுகிறான்” என்பதெல்லாம் வெகு நிச்சயமாய் இது போன்ற படைப்புகளிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவங்களும், சொல்லப்படுகின்ற காரணங்களும் முழுக்க முழுக்க படைப்பாளியின் கண்ணோட்டத்தின் வழியாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில விஷயங்களைப் படிக்கும் போதே கூட “சாவர்க்கர் தவறு செய்து விட்டாரே” என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தாலும் அதற்கு சால்ஜாப்பாக தொடர்ச்சியாய் சில காரணங்களை சொல்லி சொல்லி தவறை இருட்டடிப்போ அல்லது நியாயப்படுத்தியோ சென்று வ்டுகிறார் ஆசிரியர்.
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் குறித்து ஒரு வருத்தம் ரொம்ப நாளாகவே எனக்கு உண்டு. அது பதிப்பகத்தின் டெம்ப்ளேட் எழுத்து முறை.
நான் ஃபிக்ஷன் வகை எழுத்துக்களை எழுதும் போது ஏதோ ஃபிஷன் வகை கதையை எழுதுவது போன்றதான எழுத்தாடல்கள், திடுக்கிடல் திருப்பங்கள், கதாநாயகன் அறிமுகத்தின் போது கொடுக்கும் பில்டப்புகளைப் போன்ற அறிமுகங்கள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லலாம்.
(உதாரணத்திற்கு இந்த புத்தகத்தில்: ஒரு காவலர் அவரை கைத்தடியால் பின் மண்டையில் தாக்கினார். சாவர்க்கர் சட்டென்று சுழன்று அதைக் கையால் பிடித்துக் கொண்டு சொன்னார். “நான் சாவதற்கு அஞ்ச வில்லை. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல நினைத்தால் உங்களில் ஒருவனையாவது கொன்று விட்டுத்தான் சாவேன்” என்று சொன்னார்)
இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம். இது போன்ற, ஏதோ சம்பவங்களை அருகிலிருந்து பார்த்தது போல் எழுதப்படும் எழுத்துக்கள் ஒரு மசாலா படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவது மட்டுமின்றி சம்பவங்களின் மீதான ந்ம்பகத் தன்மையை முற்றிலுமாய் குறைக்கின்றது.
ஆனால் இது முழுக்க முழுக்க எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தின் தனிப்பட்ட உரிமை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் அமெச்சூர் வாசகனை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமாய் கூட இருக்கலாம். ஆகையால் இதை ஒரு குற்றச்சாட்டாய் இல்லாமல் தனிப்பட்ட ஒருவனின் கருத்தாய் பதிவு செய்கின்றேன்.
சாவர்க்கர் குறித்தான இந்த புத்தகமும் கிழக்கு பதிப்பகத்தின் டெம்ப்ளேட்டிலிருந்து சற்றும் அடி பிறழாமல் எழுதப்பட்டதே.
வரலாற்றுச் சம்பவங்கள் நிறைந்த புத்தகத்தை எழுதும் போது ஆதாரத்திற்காய் உபயோகப்படுத்திய தரவுகளை புத்தகத்தின் ஏதேனும் ஒரு சிறு மூலையிலாவது குறிப்பிட்டிருந்திருக்கலாம். வீர சாவர்க்கர் குறித்தான இந்த புத்தகம் என்றில்லை கிழக்கின் பல புத்தகங்களில் இது இல்லவே இல்லை.
ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒரு சாதாரண விஷயங்களே. இதற்காக நான் கோபம் கொள்கிறேன் என்றால் அது ஓவர் ரியாக்ட் செய்வது போல் இருக்கும். என்னுடைய அடிப்படை கேள்வி இந்தப் பிரதியின் மூலம் எழுத்தாளர் தனது வாசகனுக்கு எதை உணர்த்த விரும்புகிறார் என்பதே?
சாவர்க்கரைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் அந்தமான் சிறைக்கு செல்லும் வரை இருந்த சாவர்க்கர் மட்டுமே வீர் சாவர்க்கர். அதற்குப் பின்பு நடமாடிய சாவர்க்கர் முற்றிலும் வேறு மனிதர். இந்தியாவில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் மத துவேஷங்களுக்கு வித்திட்டதில் தெரிந்தோ தெரியாமலோ அவருக்கும் பங்கிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பணிகளை, துணிச்சலான நடவடிக்கைகளை போற்ற வேண்டியது எப்படி நம் கடமையோ, அதே போல அந்தமான் சிறையில் கோழைத்தனமாய் அவர் பிரிட்டிஷாரிடம் கெஞ்சிய மன்றாடல்களை, காந்தியடிகள் கொலையில் அவருக்கிருந்த பங்கினை (நேரடியாகவோ, மறைமுகமாகவோ), இந்து மகா சபையின் மூலமும், தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மனதில் அவர் விதைத்த மதத் துவேஷங்களை இடித்துரைப்பதும் நம் கடமையே.
ஆனால் இந்த புத்தகம் வாசகனுக்குள் விதைப்பது என்ன? “தேசபக்தியில் அவரது உயரத்தை எட்டிப்பிடித்தவர்கள் மிகக் குறைவு. சூரியனை மேகம் மறைப்பதால் சூரியனுக்குக் குறைவில்லை” என்பது போன்ற வாசகங்களும், புத்தகத்தின் இறுதியில், “இமயமலையின் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லி விட முடியுமா? சிகரம்தான் சின்னதாகப் போய்விடுமா? சிகரத்தை நோக்கிக் கை கூப்புவோம். அந்த மரியாதையையாவது செய்யக் கற்றுக் கொள்வோம்” என்ற இறுதி வரிகளும் வாசகனுக்கு எப்படிப்பட்ட பிம்பத்தை தோற்றுவிக்கிறது என்பது முக்கியம் அல்லவா?
சாவர்க்கர் குறித்தான தீவிர விமர்சனம் எழுப்ப வேண்டிய பகுதிகளில் எல்லாம் ஆசிரியர் விமர்சனத்திற்குப் பதிலாக சால்ஜாப்புக் காரணங்களை மட்டுமே அடுக்குகின்றார். ஒரு இடை நிலை வாசகன் வெகு எளிதாய் “பாவம்பா அவரு மட்டும் என்னதான் செய்வார்” என்பது போன்ற பிம்பத்தை வெகு எளிதில் ஏற்படுத்திக் கொள்ள தீவிர முயற்சி செய்திருக்கிறார்.
அந்தமான் சிறையிலும், ரத்னகிரி சிறையிலும் இருந்த வார்டன்கள் அனைவரும் முஸ்லீம்கள். அவர்களால் அந்தமானில் அனைத்து இந்துக் கைதிகளும் கடும் துன்பப் பட்டார்கள். அதனாலேயே சாவர்க்கர் பெரும் மன மாற்றம் அடைந்தார் என்ற கருத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வாசகர்களுக்கு ஏற்றுகிறர் ஆசிரியர். ஆனால் அந்தமான் சிறையில் இருந்த வேறு எந்தக் கைதிகளும் இத்தகைய மன மாற்றத்தை அடைந்திருக்க வில்லை. அது மட்டுமல்லாமல் அந்தமான் சிறையின் புகார் பதிவேடுகளில் அது போன்று ஒரு குற்றச்சாட்டும் காணப்பட வில்லை.
“ஆயுள் காலத்திற்கு நாடு கடத்தப்பட்ட என் கதை” சாவர்க்கரால் 1927ல் வெளியிடப்பட்ட சுய சரிதை. இவரே 1908ல் “முதல் இந்திய சுதந்திரப் போர் – 1857″ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களுக்கு நடுவேதான் எத்தனை எத்தனை வித்தியாசம்.இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் புத்தகத்தில் எழுதிய அதே சாவர்க்கர், தனது சரிதையை எழுதும் போது முஸ்லீம்களுக்கெதிரான துவேஷங்களையும், விரோதப் போக்கையும் விதைக்கிறார்.
முதல் உலக்ப்போரில் இங்கிலாந்திற்கு எதிராக துருக்கியும் ஜெர்மனியும் இணைந்ததை தனது எதிரிக்கு எதிரான குழுவாய் அவரால் காண முடிய வில்லை. அதை அவர் முஸ்லீம்கள் ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்து கொள்ளையடிக்கும் முயற்சியாக பார்க்கிறார். மதாபிமானம் ஒரு மனிதனின் தேச பக்தியை எவ்வாறு நீர்த்துப் போகச் செய்து விடுகிறது என்பதை அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று, இந்தியா முழுக்க தேசிய கொடியை ஏற்றிக் க்ண்டாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், தனது வீட்டில் இந்து மகாசபையின் கொடியை ஏற்றி வைத்து இந்தியக் கொடியை முற்றிலும் நிராகரித்தவர் சாவர்க்கர். தனது புத்தகத்தில் அதற்குக் பக்கம் பக்கமாய் காரணங்களை அடுக்கியவர். மதாபிமானத்தால் அவர் செய்த இந்த செயல்கள் குறித்து புத்தகத்தில் எங்கும் மருந்துக்குக் கூட கோடிட்டுக் காட்டப்பட வில்லை.
சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று அந்தமானுக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது உடல் நிலை நலிவடையத் தொடங்கியது 1915 – 16 க்கு மேல்தான். மிக மோசமாகத் தொடங்கியது 1918ல் தான். ஆனால் சாவர்க்கர், தான் சிறைக்கு கொண்டுவரப்பட்ட அந்த ஆண்டிலேயே (1911) முதல் மன்னிப்புக் கடிதம் / மனுவை எழுதி இருக்கிறார்.
1911 அக்டோபரில் முதல் கடிதம், 1912 டிசம்பர் 15 அன்று இரண்டாவது கடிதம், 1913 – நவம்பரில் ஒன்று, 1914 – பிப்ரவரியில் ஒன்று, இன்னும் 1915… 1918 என்று அவர் தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இந்தப் புத்தகத்தில் வசதியாக தேவைப்படும் இடங்களில் வெறுமனே வருடங்களை குறிப்பிடாமல் இருப்பதன் மூலமும், அவர் உடல் நிலை மோசம் என்று காரணங்களை அடுக்குவதன் மூலமும் எழுத்தாளர் சாவர்க்கர் மீதான புனித பிம்பம் கலைந்து விடாதவாறு பார்த்துக் கொள்கின்றார்.
இன்னும் பிரிட்டிஷாருக்கு அவர் எழுதிய கடிதங்களை அப்படியே நான் இங்கு பிரசுரித்தால் படிக்கும் எவருக்கும் அவர் எந்தளவு தரம் தாழ்ந்து போகத் தயாராயிருந்தார் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள முடியும். சாவர்க்கரின் வரலாறை எவர் ஒருவர் எழுதினாலும் இந்த கடிதங்களை படிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர் வசதியாக இந்த வாசகங்கள குறித்தான எந்த ஒரு சிறு குறிப்பையும் வாசகனிற்கு தெரியப்படுத்தவே இல்லை. புனித பிம்பத்தைக் கட்டிக் காப்பாற்றுவதில் மீண்டும் ஒரு முறை இங்கே வெற்றி பெற்றிருக்கிறார்.
அந்தமான் சிறையில் மற்ற கைதிகளை தூண்டி விட்டு வேலை நிறுத்தத்தை தூண்டி விட்ட சாவர்க்கர் தான் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அதற்குக் காரணமாய் அவருக்கு அவர் மனைவியிடமிருந்து கடிதம் வர வேண்டி இருந்தது. இதில் கலந்து கொண்டால் அவருக்கு அந்த கடிதம் கிடைக்காது. பாவம் என்று சாவர்க்காரின் மனசாட்சியாகவே இருந்து பதில் தருகிறார் ஆசிரியர்.
ஆனால் அதே போராட்டத்தில்தான் 60 வயது முதியவர் சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங், பிரித்வி சிங் என்ற இளைஞனும் 12 நாட்களுக்கும் மேலாக, உண்ணாவிரதம் இருந்து தனது வீரத்தை, புரட்சித் தன்மையை நிரூபித்திருக்கிறார்கள்.ஆனால் வரலாற்றுப் பாடங்களில் அவர்களின் சுவடுகளை தேடித்தான் கண்டு பிடிக்க முடிகின்றது.
சாவர்க்கர் மீதான உச்சகட்ட விமர்சனமே காந்தியடிகள் கொலையில் அவரது பங்குதான். ஆனால் கோட்சே தன் வாக்கு மூலத்தில் சாவர்க்கருக்கும், இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டான் என்ற ஒற்றை வரியின் மூலம் எல்லா குற்றச்சாட்டுக்களையும் புறம் தள்ளுகிறார் ஆசிரியர். அது மட்டுமின்றி தொடர்ந்து நடந்த கலவரத்தில் அவரது சகோதரர் தாக்க்கப்பட்ட தகவல்களையும் தேவைக்கும் அதிகமான அளவில் பதியச் செய்வதன் மூலம் ஏற்படும் சிறு சந்தேக உணர்வையும் அனுதாப உணர்வாய் மாற்றுவதன் மூலம் ஆசிரியர் தனது எழுத்து அரசியலை தொடர்ந்து கடை பிடித்திருக்கிறார்.
ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ், பிஜேபி போன்ற இந்துத்வா அமைப்புகள் மாறி மாறி தன் பங்குக்கு இவரை புனித பிம்பப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அந்தமானில் இவரது நினைவுச் சின்னங்களை வைத்து அத்வானி போன்றவர்களால் நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுக்கள், முரளி மனோஹர் ஜோஷி போன்றவர்களால் சாவர்க்கரின் இன்னொரு முகம் தெரியாத படி “சுதந்திரப் போராட்ட நூல் வரிசைகள்” மீதான தடை என்று இந்த திருவிளையாடல்களை பெரிய பட்டியலே இடலாம்.
இந்த சூழலில் வந்திருக்கும் இப்புத்தகம் பல வரலாற்றாசிரியர்கள் தெரிந்தே செய்த புனித பிம்பப் படுத்துதலை தொடர்ந்து செய்கிறது. எழுத்தாளர்களின் சார்பு அரசியலை விரும்பாத, மிகைப்படுத்தி எழுதப்படும் வரலாறுகளை விரும்பாத எந்த ஒரு வாசகனுக்கும் இந்த புத்தகம் வெகு நிச்சயமாக சிறிதளவேனும் கோபத்தை ஏற்படுத்தும்.
ஒட்டு மொத்த புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எழுத்துப் பிழை தட்டுப்பட்டது. புத்தக அட்டை வடிவமைப்பு, பேப்பர் தரம், எழுத்துருக்கள், ஸ்பேசிங் என்று அச்சு ஊடகத்தில் புதியதோர் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட கிழக்குப் பதிப்பகத்தை எனக்குப் பிடித்திருப்பதற்கு எழுத்தாளனுக்கான ராயல்டி நேர்மை, மார்க்கெட்டிங், துவண்டிருந்த அச்சு ஊடகத்தை உயிர்த்தெழச் செய்ததில் கிழக்கின் பங்கு என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன.
கிழக்கு பதிப்பகத்திடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களது அடுத்த புத்தகத்தில் எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கிறீர்களோ இல்லையோ, தயவு செய்து கருத்தியல் பிழைகளைச் சரி பாருங்கள்.
நூலின் பெயர் : வீர் சாவர்க்கர்
நூல் ஆசிரியர் : இலந்தை சு.ராமசாமி
விலை : ரூ.80
பக்கங்கள் : 200
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.
ஆதாரத்திற்காய உபயோகப் படுத்தப் பட்டவை: